‎----அப்பாவுக்கு மகன் எழுதுகிறேன்----

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும்

உன்னை நினைக்க முடிகிறதே தவிர
உன்னை போல் இருக்க முடியவில்லை...

தமிழ் எழுத்துக்கள்
தலைமுறை பல கடந்தும்
உடையாமல் இருக்கிறதே!
அது எழுத்துக்கள் அல்ல
தலைவா...
உன் எலும்புகள்.

நீ கையில் வைத்திருந்த
கருவிக்கு பெயர்
பேனாவா?
இல்லை
பீரங்கியா என்ற
பீதி இன்னும்
எங்களுக்கு தெளியவில்லை.

நீ கவிதை எழுதிய காகிதங்களுக்கு
கொஞ்சம் கணம் அதிகம்...
அதனால்தான்
அந்த சாதாரண காகிதங்கள்
சாம்பல் ஆகாமல் இருக்கிறது...

ஒரு சந்தேகம் ஐயா!

ஒரே மிதியில்
உன் கவிதைகள்
தமிழ் சமூகத்தை
தவிடு பொடியாக்கிவிட்டதே!
இதை எழுதியது
யானைகளின் கையா?

பல சவுக்கடி தரும்
ஒரு பாடல் எழுத
உனக்கு தேவைப் பட்டது...
பானை நிறைய மையா?

உன் கவிதைகளை வாசிக்கிறபோது
உன் வரிகளில்
என் விரல் பட்டுவிட்டால்
சுட்டு விடும் என்று
சுதாரிப்பாய் இருப்பேன்.

படித்ததும் முடித்ததும்
இந்த
பூமியை கையால்
புளிந்துவிடலாம் என்ற
பூரிப்போடு படுப்பேன்.

நீ இன்னும் மாய்ந்து போகவில்லை..
தீ இன்னும் தீர்ந்து போகவில்லை..


உன் முறுக்கு மீசையை பார்க்கிற போது
ஒரு முறையாவது
அதை என் கைகளால்
சுருட்டிவிட வேண்டும் என்று
ஆசை படுகிறது அப்பா
இந்த மகனின் மனசு..

உன் முண்டாசை கட்டி கொண்டால்
வானம் முட்டிவிடும்.
உன் பாட்டை படித்துகொண்டால்
பயம் விட்டுவிடும்.

என்ன செய்வது அப்பா...

உன் ஒவ்வொரு பிறந்த நாளிலும்

உன்னை நினைக்க முடிகிறதே தவிர
உன்னை போல் இருக்க முடியவில்லை...

----தமிழ்தாசன்-----