‎-----சாதிக்கு சவுக்கடி-----

ஜாதிகள் இல்லையடி பாப்பா.
வகுப்பில் பாடம் நடக்குது...
ஜாதி சான்றிதழ் எடுத்துவாப்பா
பள்ளிகள் கேட்குது..
ஐயையோ
உலகத்தின் உதடுகள் சிரிக்குது...

ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று
பாடிய பாரதியின் சாதியை
தேடி கொண்டு இருகிறார்கலாம்.

இது
சாதியை கொண்டாடும்
சகுனிகளுக்கு
என் சவுக்கடி.

தேச தலைவர்களை
சாதி தலைவர்களாய்
மாற்றிய அயோக்கியர்களுக்கு
என் செருப்படி.

கயவர்களை கையாள
சவுக்கை எடுக்கும் முன்..

தேச தியாகிகளே!
உங்களிடம் கேட்க்க
இந்த கேன சிறுவனுக்கு
சில கேள்விகள் உள்ளது.

ஐயா..
கல்விக்கு கண் கொடுத்த
கலங்கரை விளக்கம் அல்லவா நீ?
உன் கல்லறைக்கு பின்
சாதி கப்பல்கள் அல்லவா
கரை சேருகிறது.

நீ என் தேசத்து
மெலுகுவர்த்தியல்லவா?
உன் சாதியினர் ஏற்றும்
ஊதுபத்திக்கே
உருகி போகலாமா?

கர்ம வீரனே
இது தர்மம் ஆகுமா?

வேற்றுமை பாராமல்
எல்லா மக்களுக்கும்
வெளுச்சத்தை அளித்து
சிங்கத்தின் அருகே
சிம்மாசனத்தில் - அந்த
சின்ன சூரியன்
சிரிப்போடு அமர்கையில்
வள்ளல்களின் வரலாறை
அவன் வடிவத்தில் கண்டவன் நான்.

தேவரே!
சாதி சால்வைகள்
உன்
சாய சிலைகளுக்கு
விழும்போதெல்லாம்
ஒரு சூரியன்
சிம்மினி விளக்காய்
சுருங்கி போவதை பார்க்கிறேன்.

ஐயா!
உன்னை அரவணைத்து கொள்ள
எனக்கு அருகதை இல்லையா?

தத்தளித்த தமிழகத்திற்கு
கப்பல் தயரித்தவனே!
உன் பெயருக்கு
பின்னால்
பிள்ளை சேர்க்க பட்டிருக்கும் என்பதை
நான் அறிவேன்.
பிள்ளை என்று சொல்லியே
இந்த பிள்ளைகளை
உன் பிடியில் இருந்து
பிரித்து விட்டார்களே...
அதை நீ அறிவாயா?

அம்பேத்கரே!
உன் புகைப்படத்தோடு
ஊர்வலம் நடத்தி வரும் சாதியினர்
நீ
சட்டத்தை சரி செய்த
சரித்திர மேதை என்பதை
என் சமூகத்தின் முன்
சமர்பிக்காமல்
நீ ஒரு
சிறுபான்மைக்காரன் என்றுதானே
எங்கள் புத்தியின் பக்கங்களில்
எழுதி வைத்து இருக்கிறார்கள்.

என்
இதய இமய மலையின்
இறுதி நுனியில்
அமர்ந்திருக்கும் உன்னை
ஆலமர ஆணி வேர் வரை
இறக்கிவிட பார்கிறார்கள்.

நான் சொல்வது தப்பா
சொல்லும்மையா?

நீ என் அப்பா
இல்லையா?

தாழ்த்தப்பட்டோரை
தாழ்த்த பட்டோர் என்று சொல்லிவிட்டால்
கலவரம் வெடித்து விடும்
சட்டம் முழித்து எழும்.

"தாழ்த்தபட்டோரே
தலித் மக்களே
தலைவர் அழைக்கிறார்".
இப்படி உங்களை
இழிவு செய்வது
உங்கள் தலைவர்கள் தானே.

அள்ளி மலர்போல்
அனைவரும் பூத்திருக்க
இவர்கள்
கள்ளி செடி என
கரம் நீட்டி
தரம் பிரித்ததும்
உங்கள் தலைவர்கள் தானே..

எந்த சாதியினர்
தாய் வாந்தி எடுத்து
வாய் வழியாக
வந்து விழுந்தவர்கள்.

எந்த மனித சாதி
மகரந்த சேர்க்கையால்
மண்ணில் ஜெனித்தவர்கள்.

எந்த சாதியின்
சடலத்தை எரித்தால்
சந்தானம் கிடைக்கும்.
சொல்லுங்கள்
அவர்கள் தோளுக்கு மேல்
மாலையாக
காலுக்கு கீழ் கோழையாக
காலம் தள்ளுகிறேன்.

மேல் சாதியின் வயிற்றில் இருப்பது மட்டும்
கருவறை சிசுக்கள்.
கீழ் சாதியின் வயிற்றில் இருப்பது
என்ன
கழிப்பறை கொசுக்களா?

இந்த மனித மரங்கள்
ஒரு விந்தின் விதை என்பதை
ஏன் மறந்து போனார்கள்?

இங்கு வேதனைக்குரிய
வேடிக்கைகள் இதுதான்.

பெரியார் வீதியில் ஜோசியர் வீடு.
பாரதி தெருவில் சாதி ஊர்வலம்
காந்தி நகரில் கலவரம்.

இனி வரும் தலை முறையில்
சாதிக்கு சமாதி கட்டும்
ஒரு கூட்டம் வரும் என்கிற
நம்பிக்கை இருந்தாலும்.

மனிதர்களை குறை கூறி
எந்த மாற்றமும் வரப்போவதில்லை.

இறைவன் என்பவன்
ஒருவன் என்றால்.

இறைவா....
இங்கு
இறங்கி வா..

நீ எந்த சாதியில்
ஜனித்தவன்.
உலராமல் உண்மை சொல்.

இல்லையெனில்
மூன்று மதங்களின் பெயரில் நீ
முரண்படுவதால்
ஒருத்தனுக்கு தான்
பிறந்தாய் என்பதை - நான்
ஒருபோதும்
ஒத்து கொள்ள மாட்டேன்.