இனத்தின் எழுச்சி.

என் எழுத்து என்பது
வெறும் எழுத்து அல்ல.
என் இனத்தின் எழுச்சி.


வெறும் 26 ஆங்கில எழுத்துகளிடம்
அன்னை தமிழின் 247 எழுத்துக்களும்
தோற்று நிற்பதா?
பீசா பர்கர் வாங்க
உன் வீட்டு
சோற்றை விற்பதா?

கிளையில் இருக்கும்
ஒரு இலையை தீண்டினாலும்
என் வேர் ஆடும்.
தலை போகும் வரை
என் எழுத்துக்கள்
தமிழுக்காக போராடும்.

என் எழுத்தை கொண்டு
தீயவரின் கழுத்தை அறுக்கலாம்.
என் எழுத்தை கொண்டு
பட்ட மரத்திலும்
பழத்தை பறிக்கலாம்.

என் பேனாவின் கைகள்
குடிசை இல்லாதவர்க்கு
குடைபிடிக்கும்.
என் இனத்தை
இழிவு செய்யும்
ஈனப் பிறவிகளின்
இடையை ஒடிக்கும்.


எல்லைகளை தாண்டி என் எழுத்து வரும்.
தமிழ் இன பெருமையை இழுத்து வரும்.

முழக்கம் வேண்டாம்
தமிழர்கள் முனங்கினால் போதும்
என் பேனா முழிக்கும்.
பசியில் ஒரு சின்னசிறு
பறவை வாடினாலும்
என் வயிறு வலிக்கும்.

மிதித்தாலும்
மீண்டும் மீண்டும்
முளைக்கும் பயிர் நான்.
மீதமிருக்கும்
மீசை பாரதியின்
உயிர் நான்...

என்னை கொலை செய்தாலும்
வலியில் அம்மா என்று கத்துமே தவிர
எவர்க்கும் ஆமா போடாது.

நான் அழுத்தினால்
நிலவுகூட
மண்ணில் விழுந்து கிடக்கும்.
என் எழுத்தினால்
தமிழ் இனம்
எழுந்து நிற்கும்.


என் எழுத்து என்பது
வெறும் எழுத்து அல்ல.
என் இனத்தின் எழுச்சி.

--கோபத்தோடு--
--தமிழ்தாசன்--